Thursday, April 26, 2018

நாணயம்

"ச்ச்சச.. நேரமே சரியில்ல" முனகியவாறே தனது முழு கோபத்தையும் இரு சக்கர வாகனத்தின் மேல் காட்டி அதை உதைத்துக் கொண்டிருந்தான் ராகவ். "சாப்பிட்டுட்டு போப்பா" என்ற அம்மாவின் குரலைக் கேளாதது போல் வந்தது தவறோ என தோன்றியது. காலம் தவறிச் சென்றால் ஏற்படும் விளைவுகளும் மேலாளரின் சிவந்த முகமும் கண் முன் வந்து போயின.
அரை மனதோடு விரைவாகப் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தான். "இந்த பஸ் எப்பவாச்சும் டைமுக்கு வருதா? இங்க வந்து பத்து நிமிஷத்துக்கு மேல ஆச்சே" பேருந்து நிலையத்தில் நின்றரியாத அவனுக்குக் கோபம் வலுத்தது. "மழை வரும் போல இருக்குது" அருகிலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். அன்னார்ந்து பார்த்தான். கரு மேகங்கள் சூல் கொண்டது போல் சூழ்ந்து கொண்டிருந்தன.இதற்கு மேல் காத்திருப்பதில் பயனில்லை ஆட்டோவில் சென்று விடலாம் என எண்ணி முடிப்பதற்குள் வெகு தூரத்தில் பேருந்தின் முகப்பு தெரிந்தது. " நல்லதாப் போச்சு" பெருமுச்சு விட்டான்.
"தம்பி.." தன்னைத் தான் அழைக்கிறார்களா என உறுதி செய்து கொள்ளத் திரும்பினான்.
அங்கே எண்பது வயது மதிக்கத்தக்கப் பெரியவர் நின்று கொண்டிருந்தார். சவரம் செய்யப்படாத தாடியும் சடை முடியும் பிய்ந்த செருப்பும் அழுக்கு வேட்டியும் தரித்தவராய் கையில் தடியுடன் நின்று கொண்டிருந்த அவரைக் கண்டதும் ஏன்டா திரும்பினோம் என்று மனதிற்குள் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
"இந்தப் பிச்சக்காரங்களுக்கு நேரம் காலமே கிடையாது. உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடைக்கலியா?"
"தம்பி அது வந்து.."
"எங்கே இருந்து தான் இப்டி உயிர எடுக்க வர்றீங்களோ?" பேருந்து நெருங்கிக் கொண்டிருந்ததை கவனித்தவன் "சரி எதாவது கொடுக்கலான்னா இங்க இருந்து நகர மாட்டான்" என எண்ணியவாறே தனது காலங்கிப் பைக்குள் விரல்களை நுழைத்தான். குளிர்ந்த காற்று வீசியது. அவனது நெற்றியில் வியர்வைத் துளிகள் எட்டிப் பார்த்தன. அதிர்ச்சியில் உறைந்தவனாய்,
வீட்டிலிருந்து கிளம்பியதிலிருந்து இங்கே வந்த வரையில் நடந்தவற்றை நொடிப்பொழுதில் மறுஓட்டம் செய்து பார்த்தான். "எங்கே..."
"தம்பி நீங்க போற அவசரத்துல இத கீழ போட்டுட்டீங்க. குரல் கொடுக்கிறதுக்குள்ள வேகமா நடந்து போய்ட்டீங்க. என் செருப்பு பிஞ்சு போச்சு. அத சரி பன்னிட்டு நடந்து வர கொஞ்சம் நேரமாயிடிச்சு.முன்ன மாதிரி எங்க வேகமாக நடக்க முடியுது.? மன்னிச்சிக்கிடுங்க தம்பி" பணப்பையை அவனிடம் நீட்டினார். அவசரமாக அதை வாங்கி திறந்து பார்த்தான். உள்ளே ஐந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் ஒரே ஒரு ரூபாய் நாணயமும் அவன் வைத்தது போல் அப்படியே இருந்தன. நிம்மதி அவன் நெஞ்செங்கும் பரவியது. புன்முறுவல் இதழோரம் மலர்ந்தது.
"நன்.....றி" அவன் நிமிர்வதற்குள் பிய்ந்த செருப்புடன் போராடியபடி, தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.. நிலையத்தை அடைந்த பேருந்து, கீறிச்சிட்டு நின்றது. பணப்பையை மடித்து கவனமாக சட்டைப்பைக்குள் வைத்தான் ராகவ். அந்த ஒரு ரூபாய் நாணயம் முன்பை விட அதிகமாக கனத்தது. முதல் மழைத்துளி அவன் கன்னத்தில் விழுந்தது.

No comments:

Post a Comment