Thursday, April 26, 2018

ஒரு கதையின் கதை

புற்றீசல்களாய் முளைத்திட்ட எழுத்தாளர்களில் நானும் ஒருவள்.ஒரு சிறிய நிகழ்வை எவ்வளவு நீளம் வேண்டுமானாலும் கற்பனை செய்து அதையே மையமாக வைத்து என்னிடத்தில் சிக்கும் அப்பாவி ஜீவன்களுடன் சண்டையும் போட்டு விடுவேன் நான்.இந்த கற்பனாசக்தியே எனக்கு நம்பிக்கை ஊற்றிற்று.என்னை எழுதவும் வைத்திற்று.
சரி எழுதுவது என்றாகி விட்டால் கரு என்று ஏதாவது வேண்டுமே.சிந்தனை குதிரை சீறிப் பாய்ந்தது.அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை விட சிறந்த ஒன்று எங்கே இருந்து விடப் போகிறது? தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் இதற்கொரு நல்ல உதாரணம்.
எனக்குத் தெரிந்த என்னைக் கவர்ந்த சிலரின் வாழ்வை மையப் படுத்தி கதை எழுதி தான் பார்ப்போமே என்ற எண்ணம் வலுப்பட்டது.
கரு கிடைத்து விட்டது. அடுத்த பெரிய குழப்பம், மொழி. தற்போதுள்ள பல இந்திய எழுத்தாளர்களைப் போலவே நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டி விடலாம் என்று தான் முதலில் எண்ணினேன். யோசித்துப் பார்க்கையில் வார்த்தைகள் வசப்பட வில்லை. தண்டவாளத்திலிருந்து தடம் புரண்ட ரயில் போல் தகதிமி ஆடி எங்கோ சென்று முட்டிக் கொண்டு நின்றது. அதை அப்படியே விட்டு விட்டு என் இனிய தமிழிடம் சரணாகதி அடைந்து கொண்டேன். இவ்வாறாக கதை எழுத வேண்டும் என்ற எனது ஆசை மற்றும் கனவு ஒரு வழியாய் முழு உருவம் பெறத் தொடங்கிற்று.
இதைப் படித்து விட்டு "எங்கே கதை? எங்கே கதை?" என்று முந்தி அடித்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
தலைப்பைப் படியுங்கள்.

No comments:

Post a Comment