Thursday, April 26, 2018

தேடல்

கலாச்சார சீர்கேடு என்று தொண்டை கிழிய கத்துபவர்களே.!
எப்படிப்பட்டது உங்கள் கலாச்சாரம் என்பதை சற்று உற்று நோக்குங்கள். மனித இனத்தை எவ்வாறெல்லாம் கூறு போட முடியும் என்று பல ஆயிரக்கணக்கான வருடங்களாக மந்திராலோசனை செய்து, மூலக்கூறுகளைப் பல வாறாகப் பிரித்து, பின் பிரிக்கவே முடியாதென எண்ணிய அணுவையும் பிரித்த அதிமேதாவி விஞ்ஞானிகளை விடவும் அதிகமாய் வெற்றி கண்டு விட்டீர்கள்.
சகமனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் அன்பு செலுத்துவதே முதல் கடமை என்ற பழங்கால தர்மங்களை எல்லாம் நீங்கள் மறந்து பல நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நீங்கள் கலச்சாரம் என்று கட்டிக் கொண்டழுவதெல்லாம்,உருவாக்கப்பட்ட காரணம் அறியாமல் எந்த கேள்வியும் எழுப்பப்படாமல் குருட்டுத்தனமாக பின்பற்றப் பட்டு பல வாறாக திரிந்து போய் கடைசியில் எதற்குமே பயன்படாதிருக்கும் வெற்றுச் சடங்குகளைத்தான்.
மேலை நாட்டுக் கலாச்சாரத்தை முழு மூச்சுடன் எதிர்ப்பவர்கள், தங்கள் அறிவை, வழக்கத்துக்கு அதிகமாக சற்று பயன்படுத்தினாலே அதன் நன்மை தீமைகள் வெகுவாகப் புலப்படும். நாம் காற்றில் பறக்க விட்ட அந்தப் பழங்கால தர்மம் இப்போது இடம் பெயர்ந்து அவ்விடம் தழைத்தோங்கத் துவங்கியிருக்கிறது. தேவையற்றதை மிகைப்படுத்தாமல் எதார்த்தைச் சாரும் எந்த கொள்கையும் நமக்குப் பிடிப்பதில்லை. பார்க்க பளபளவென்று, நம் தேவைக்கெல்லாம் வளைந்து நெளிந்து உருவமற்றுப் போகும் பிம்பங்களைத்தான் ஆராதிக்கின்றோம்.
சரி,தவறு என்பது காலத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தது.
காலத்திற்கேற்ப மாற்றம் வரவில்லையெனில் சரியும் தவறும் பொய்யும் மெய்யும் எவருமறியாமல் தாமாகவே இடம் மாறிக் கொள்ளும். இந்த நிதர்சனங்களை உணராதவர்கள் தான், அடுத்தவர்களிடம் பிழை கண்டுபிடிப்பதிலேயே ஆயுளைச் செலவழித்துக் கழிக்கின்றனர்.
சமுதாயச் சிறைக்குள் சிக்கி சிறகுகளை, அலங்காரப் பொருட்களாக அணிந்து பெருமையடித்து திரிகின்றனர்.
மதம், இனம், மொழி, நாடு, ஏன், பூமியைக் கூட நான் எனக்கொரு அடையாளமாகக் காட்ட விரும்பவில்லை. நான் பிரம்பஞ்சத்தின் ஒரு பகுதி. முடிவில்லாமையில் தோன்றி முடிவில்லாமையில் கலப்பதற்கு இடையில் மனித உருவில் உலவித் திரியும் ஒரு பிர(ய)ாணி.
மனித உடல் கொண்டு, பசிக்கு உணவருந்தி, மூளை செயல்பாடும் இருப்பதால், அதன் ரசாயணச்செரிவுகளால் ஏற்படும் உணர்ச்சித் ததும்பல்களுக்கு நானும் உள்ளாகிறேன். எனினும், உயிரின் தேடல் மட்டும் இன்னும் ஓயவில்லை.
எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்த விளங்காப் பதிவாகவே இது அமையலாம். திருத்தி அமைக்கப்படாத எனது எண்ண ஓட்டங்களே இவை. இதை உலகிற்கு அறிவித்து பிறரது பொன்னான காலத்தை வீண் விரயம் செய்ய நான் விரும்பவில்லை.
இது எனக்கான என்னுடைய பதிவு.

No comments:

Post a Comment