Thursday, April 26, 2018

தங்கப்பாதை

உலகில் இரு வகை மனிதர்கள் உள்ளனர்.. ஒன்று, மூளைச் சலவை செய்பவர்கள் மற்றொன்று, செய்யப் படுபவர்கள்.

உலக மக்கள் சரி, தவறு என்பதை எவ்வாறு பிரித்தறிரிகிறார்கள் என்ற லாஜிக்(logic)ஐ எடுத்துக்காட்ட தங்கத்தின் துணை நாடுகிறேன்.திசையற்ற எனது எண்ண ஓட்டங்களுடன் பயணிக்க இசைந்ததற்காய், தங்கமே உனக்கு நன்றி.

தங்கம் இயல்பாக குவார்ட்ஸ்(quartz) கற்களோடு இழைந்து நெளிந்து வளைந்து பிணைந்து, நதிப்படுகையில் வாழ்கின்றது.(ஆம், அதை உயிர் மற்றும் உணர்வுள்ள பிராணியாக நாம் உருவகம் செய்து கொள்வோம்) மூளைச் சலவை செய்யும் மெத்தப் படித்த, முற்றும் உணர்ந்த மேதாவிகள், தங்கத்திடம் சென்று, "இதென்ன, நீ யாருக்கும் பயன்படாமல் இப்படி அர்த்தமற்ற வாழ்வு வாழ்கின்றாயே. இதனால் என்ன பயன்? நீ தீப்பிழம்புக்குள் சென்று அக்னி ஜூவாலையில் உருகி, கம்பியாய் திரண்டு, சுத்தியால் அடிபட்டு தகடாய் விரிந்து, கொல்லரின் கை சேர்ந்து அணுஅணுவாய் செதுக்கப்பட்டு நுனுக்கமாய் வேலைபாடுகள் பெற்று ஆபரணமாய் மாறியபின், மேலான ஒருவரின் அங்கத்தை அலங்கரித்து, அதனால் அவர் அடையும் பூரிப்பை கண்டுணர்ந்த பின் அல்லவா உனக்கு கதி மோட்சம் கிட்டும். இந்த மேலான வாழ்வை விட்டு விட்டு, இவ்வாறு அற்பமாய் இருப்பது முறையா?" எனறொரு கேள்வி எழுப்புவர். இதற்கு தங்கம், "அட ஆமா.. இது தெரியாம இவ்ளோ நாள் ஆயுச கழிச்சிட்டேனே.! இதோ இப்பவே நகையா மாறிடுறேன்" என்று சிலாகித்துக் கொண்டு கிளம்பினால் அதற்கு கிடைக்கும் பெயர், "நல்ல தங்கம்"
இவ்வாறு கூறாமல், "இது தான் எனது இயல்பு. நான் நதியுடனே மகிழ்ச்சியாய் இருக்கிறேன். நகையாய் மாற விருப்பமில்லை" என மறுத்து விட்டால், அதற்குப் பெயர் தான், "கெட்ட தங்கம்".
நல்ல தங்கம் என்று பெயர் பெற்றவை எல்லாம் உடனே கூடி, மிச்சம் இருப்பவற்றை பார்த்து "கெட்ட தங்கம் ஒரு சோம்பேறி, கல்லா இருக்கிற தாழ்ந்த பிறவி. நாங்க தான் உசத்தி. மனுஷங்க எங்கள எவ்ளோ புகழ்றாங்க தெரியுமா?" என்று தங்களது அருமை பெருமைகளை எடுத்துரைத்து, தங்கள் கூட்டத்தை விரிவு படுத்திக் கொள்ளும்.
கெட்ட தங்கமோ, இதை ஒன்றுமே சட்டை செய்யாமல், மல்லார்ந்து படுத்துக் கொண்டு சூரிய குளியல் எடுத்துக் கொண்டிருக்கும்.
இக்கதையை மூன்றாமவர் பார்வையிலிருந்து நடுநிலைமையாய் ஒரு நோட்டமிடலாம், 'நல்ல கெட்ட' 'உயர் தாழ்', என்ற வார்த்தைகளை எல்லாம் களைந்து விட்டு.

கல்லாய் இருந்த போதும் நகையாய் மின்னிய போதும் தங்கத்திற்கு இறுதியாக கிடைத்தது என்னவோ, "களிப்பு/உவகை/மகிழ்ச்சி" என்னும் மனநிலயே.
கூடுதலாக, முதலாவது பதிலளித்த பெரிய தங்க கூட்டத்திற்கு, "நான் பெரியவன். இக்கூட்டத்தில் சேராதவர்கள் கீழானவர்கள்" என்று எண்ண வைக்கும், "பெருமை/கர்வம்/ஆணவம்" என்ற உணர்வு கிடைக்கப்பெற்றது.
இதில் மிகப் பெரிய இலாபம் பெற்றது யார் என ஊகிக்க முடிகிறதா? சந்தேகத்திற்கு இடமின்றி, மூளைச் சலவை மேதாவி தான்.
"இது தான் உனக்குச் சிறந்தது, இவ்வாறு செய்தால் நீ பெரியவன், உனக்கு மதிப்பு அதிகம்" என்று தங்கத்தை நம்ப வைத்து ஏமாற்றியது தான் அவரது திறமை. அதன் பரிசு தான், எல்லா இன்னல்களையும் தாண்டி ஆபரணமாய் வெளி வந்த தங்கத்தை, லாவகமாய் கழுத்தில் மாட்டிக் கொள்வது. 'ஏமாற்றியது' என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கும் காரணம் உண்டு. தங்கம் நகையாய் செம்புடன் கலந்த பின், அதன் மதிப்பு மனிதர்களிடையே உண்மையில் குறைந்து தான் போய்விடுகிறது. வெளியே "நல்ல தங்கத்தை" புகழும் அவர்கள், மறைவாய், "கெட்ட தங்கமாய்" பெயர் பெற்ற "தூய" தங்கத்தையே நாடுகின்றனர்.

நல்ல தங்கமாவதா? கெட்ட தங்கமாவதா? இந்த பெரிய முடிவை தங்கத்திடமே விட்டு விடுகிறேன்.

இதில் பல கிளைக் கதைகளும், வாதவிவாதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், நேரம் மற்றும் பொறுமை ஆகிய முக்கிய வஸ்துகளின் தட்டுப்பாடு இருப்பதால், இக்கதை இவ்விடமே முற்று பெறுகின்றது.

முற்றும்

No comments:

Post a Comment